நாகை மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் மேற்கூரை இடிந்த விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா சார்பில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 3 பேர் விரைவில் பூரண நலன்பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா சார்பில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 8 பேர் உயிரிழந்த செய்தி கேட்டும், மேலும் இச்சம்பவத்தில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் செய்தி கேட்டும் மிகுந்த மனத்துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
விலை மதிக்கமுடியாத மனித உயிர்கள் அரசின் அலட்சியப்போக்கால் பறிபோகும் கொடுமை தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது - பொதுமக்கள் பெரிதும் நம்பும் அரசு பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பயன்படுத்தும் பல பணிமனைகள் பராமரிப்பின்றி உள்ளன - இக்காரணத்தால்தான் பொறையாறில் இந்த கோர விபத்து நடந்துள்ளது - அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பு முற்றிலும் இல்லாத நிலையைத்தான் இந்த விபத்தும் உயிர்ப்பலியும் எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த சமயத்தில், தன்னை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், போக்குவரத்து துறைக்கு போதிய நிதியை முதலமைச்சராக உள்ள பழனிசாமி ஒதுக்கவில்லை என்றும், அவரைச் சார்ந்த ஒருசில அமைச்சர்களின் துறைகளுக்கு மட்டுமே போதிய நிதி ஒதுக்கப்படுகிறது என்றும் குறைபட்டுக் கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ள கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், அமைச்சர் அன்று சொன்ன குறை, தற்போதுவரை நிவர்த்தி செய்யப்படவே இல்லை என்பது தெரியவருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரும், துறையின் அமைச்சரும் உரிய நிதியை அத்துறையின் பராமரிப்புக்கும் வளர்ச்சிக்கும் வருவதை உறுதி செய்திட வேண்டும் - பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தும் துறைக்கு குறையில்லாத வகையில் சுயநலனுக்கு அப்பாற்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மாண்புமிகு அம்மா வகுத்த பாதையிலிருந்து முற்றிலுமாக விலகி ஆட்சி நடத்தும் இந்த மக்கள் நலன் மறந்த ஆட்சியாளர்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், மக்கள் வாழ்வு வளம்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அல்லும் பகலும் அயராது உழைத்தவர் நம் இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா என்றும் கூறியுள்ளார். ஆனால், இன்றோ மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது - மக்கள் வாழ்வை பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் இந்த அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - விலை மதிப்பற்ற தொழிலாளர்களின் உயிர் பலிக்கு பிறகு நிதி உதவி வழங்குவதை விட, இந்தப் பணத்தை முன்னரே செலவு செய்து கட்டடத்தை சரிசெய்திருந்தால் 8 தொழிலாளர்களின் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழனிசாமி அரசின் அலட்சியப் போக்கால் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவின் சார்பில், ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் மரணமடைந்தோரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 3 பேர் விரைவில் பூரண நலன்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.