தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 2ம் கட்ட சிறப்பு முகாம் - ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெயரை சேர்க்க விண்ணப்பம்
Oct 23 2017 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான 2-ம் கட்ட சிறப்பு முகாம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் கடந்த 11-ம் தேதி முதற்கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிலையில் 2-ம் கட்டமாக இன்று சிறப்பு முகாம்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற்று வரும் முகாமில் ஏராளமானோர் பங்கேற்று, படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். முகாம் நடைபெறும் வாக்குச் சாவடி மையங்களில் விண்ணப்பம் இல்லாத பட்சத்தில், www.tnelections.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடைபெற்று வரும் முகாமில், வாக்காளர் பெயர் சரிபார்ப்பு, நீக்கம் மற்றும் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. ஏராளமானோர் இம்முகாமில் பங்கேற்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை காண்பித்து, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டம் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் உள்ள 543 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.