கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மாவுக்கு என்றுமே பதவி ஆசை இருந்ததில்லை என்றும், அவர் நினைத்திருந்தால், என்றைக்கோ பதவிக்கு வந்திருக்க முடியும் என்றும் கழக கொள்கைப்பரப்பு செயலாளர் திரு.தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் இயக்கமான அ.இ.அ.தி.மு.க. வின் 46-வது ஆண்டு தொடக்கவிழாவை எழுச்சியுடனும் உற்சாகத்துடன் கொண்டாடவும், நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும், கழக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்பட்டு வரும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, தஞ்சை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற கழகத்தின் 46 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக பொருளாளர் திரு.எம்.ரெங்கசாமி, கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு.தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கும்பகோணம் நகர, ஒன்றியம், பாபநாசம் ஒன்றியம், அம்மாபேட்டை, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திரு.தங்கத் தமிழ்ச்செல்வன், தமிழக அமைச்சர்கள் அனைவரும் பதவி ஆசையில் இருப்பதாகவும், கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா நினைத்திருந்தால் என்றோ பதவிக்கு வந்திருக்க முடியும் என்றும் கூறினார்.
இதேபோல், கும்பகோணத்தில் கழகத்தின் சார்பில், பாபநாசத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜோதி ஏந்தி தொடர் ஓட்டமாக வந்து கழக பொருளாளர் எம்.ரங்கசாமி மற்றும் கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு.தங்க தமிழ்ச் செல்வன் ஆகியோரிடம் வழங்கினர்.
மதுரை மாநகர் மாவட்ட வடக்கு 2ம் பகுதி கழகம் சார்பில் செல்லூரில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் உற்சாகமாக பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்டக் கழக செயலாளர் திரு.ஜெயபால் முன்னிலை வகித்து கழகப் பணிகள் குறித்து பேசினார். இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
செல்லூரில் இதுவரை கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தை மிஞ்சும் வகையில் ஆயிரக்கணக்கான பெண்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கொட்டும் மழை என பாராமல் கலந்துகொண்டது கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவின் பின்னால் உண்மைத் தொண்டர்கள் இருப்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்தது.
வேலூர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் சோளிங்கர் நகரில் கழகத்தின் 46ஆம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் புதிய எழுச்சியுடனும், உத்வேகத்துடனும், வாணவேடிக்கையோடு நடைபெற்றது. வேலூர் கிழக்கு மாவட்டக் கழகச்செயலாளரும், தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள சட்டமன்ற உறுப்பினருமான திரு. என்.ஜி. பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கழக அம்மா பேரவை செயலாளர் திரு.எஸ்.மாரியப்பன் கென்னடி, வேலூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஆர். பாலசுப்பிரமணி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளரும், தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள சட்டமன்ற உறுப்பினருமான திருமதி. ஜெயந்தி பத்மநாபன், கழக அமைப்புச் செயலாளர் திரு. சி.கோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பில், வ.உ.சி. திடலில் மாவட்டக் கழக அவைத்தலைவர் திரு.P.P. சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாமக்கல் மாவட்டக் கழகச்செயலாளரும், அமைப்புச் செயலாளருமான திரு. எஸ். அன்பழகன், கழக இலக்கிய அணிச் செயலாளர் திரு.கா. டேவிட் அண்ணாதுரை, தலைமைக் கழகப்பேச்சாளர் திருக்கழுக்குன்றம் வெங்கடேசன், கழக அமைப்புச் செயலாளர் திரு. NkP. ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.