திருப்பூர் அருகே பாலூட்டி இனமான வௌவால்களுக்கு கிராம மக்கள், வாழ்வளித்து வருகிறார்கள். மனிதன் நலமுடன் உயிர்வாழ பல உதவிகளை செய்யும் வௌவால் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. மருந்துக்காகவும், உணவிற்காகவும் வேட்டையாடி அழிப்பவர்களிடம் இருந்து பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை மற்றும் பறவை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு...
விழுந்தாலும் எல்லோர் விழிகளுக்கும் விருந்தாகிப்போகின்ற அருவி போல, கேள்விக்குறிபோல் தலைகீழாகத் தொங்கினாலும், அதுவும் ஒரு கவித்துவம்போல் காட்சியளிப்பவை தான் வௌவால்கள்...
முதுகெலும்புடன் பறக்கவல்ல பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இவ்வௌவால்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாக, விலங்கின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சாவக்காட்டுப்பாளையம்... அமைதியான சூழ்நிலையில், ஆரோக்கியமான சுற்றுச்சூழலுடன் அடையாளம் காணப்படும் அழகான கிராமம்... இக்கிராமத்தில் 40 ஆண்டுகள் வயதுடைய அரசமரம், புளியமரம் இவற்றின் கிளைகள் தான், ஆயிரக்கணக்கான வௌவால்களின் வாடகை கொடுக்காத வசிப்பிடம்...
இரவு நேரங்களில் இரை தேடி சுமார் நூறு கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய வல்லமையைப் பெறுவதற்காக, பகல் நேரங்களில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு ஓய்வெடுக்கும் இந்த பாலூட்டி விலங்கு...
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்குச் சென்று, காப்பிக் கொட்டைகளை ருசித்துவிட்டு, மீண்டும் வசிப்பிடத்திற்கே வாசம்செய்ய வந்துவிடுகின்றன இந்த பழம்திண்ணி பாலூட்டிகள்... வேட்டைக்காரர்களிடமிருந்து, இந்த வௌவால்களை கண்போல் காத்துவருகின்றனர் கிராம மக்கள்...
திருப்பூர் காந்திநகர், கோவை வ.உ.சி. பூங்கா, சேலம் ஆத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள அரசமரம், ஆலமரம், புளியமரம், இலுப்பை மரம் ஆகிய மரக் கிளைகளில் லட்சக்கணக்கான வௌவால்கள் வசிக்கின்றன...
கடந்த சில ஆணடுகளாக ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, மரங்கள் காய்க்காததால், ஏராளமான வௌவால்கள் உயிரிழந்துள்ளன... மருந்துக்காகவும், உணவுக்காகவும் வௌவால்கள் வேட்டையாடப்படுகின்றன.
அழிவின் விளிம்பில் நிற்கும் வௌவால் உயிரினத்தைக் காப்பாற்ற, தமிழக அரசின் வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?... இதுதான் இயற்கை மற்றும் பறவை இன ஆர்வலர்களின் இப்போதைய கேள்வி...