காவல்நிலையங்களில் விசாரணையின்போது குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் துன்புறுத்தல் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
Dec 15 2017 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவல்நிலையங்களில் விசாரணை என்ற பேரில் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் துன்புறுத்தப்படுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் புகார்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் காவல்நிலையங்களில் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நீதிபதி திரு. எம்.எஸ். ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசாரணை அதிகாரிகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றை குற்றவியல் நடைமுறை சட்டவிதிகளுக்கு உட்பட்டே பயன்படுத்தவேண்டும் என நீதிபதி தெரிவித்தார். எனவே விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தும் செயல்களில் விசாரணை அதிகாரிகள் ஈடுபடுவதை நீதிமன்றம் இனியும் வேடிக்கை பார்க்காது என்றும் நீதிபதி எச்சரித்தார். மேலும் காவல்நிலையங்களில் நடத்தப்படும் விசாரணை விவரங்களை காவல்நிலைய டைரியில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.