பணப்பட்டுவாடாவை வீடியோ எடுத்த ஜெயா டிவி செய்தியாளர் பத்மநாபன், ஒளிப்பதிவாளர் மோகன் மீது இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தரப்பினர் கொலைவெறி தாக்குதல் - பணவிநியோகத்தை வீடியோ எடுத்ததால் அராஜகம் - படுகாயமடைந்த செய்தியாளருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை
Dec 18 2017 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில் பணவிநியோகத்தில் ஈடுபட்ட இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பினரை படம் பிடித்த ஜெயா டிவி செய்தியாளர் பத்மநாபன், ஒளிப்பதிவாளர் மோகன் உள்ளிட்டோர் மீது குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில், படுகாயம் அடைந்த அவர்கள் அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் கழக துணைப்பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரனின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இபிஎஸ்-ஒபிஎஸ் அணியினர் தண்டையார்பேட்டை பகுதியில் இருக்கும், கிரகலட்சுமி அப்பார்ட்மெண்டில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குளை பெறும் எண்ணத்தில், காவல்துறையினர் உதவியுடன் வாக்காளர்களுக்கு பண விநியோகித்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்து அதனை படம் பிடித்த ஜெயா டிவி செய்தியாளர் பத்மநாபன் மற்றும் ஒளிப்பதிவாளர் மோகன் உள்ளிட்டோரை, காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். செய்தியாளரையும், ஒளிப்பதிவாளரையும் மிரட்டியும், எச்சரித்தும் அங்கிருந்து துரத்தினர்.
இந்த ஜனநாயக விரோத செயலை தட்டிக்கேட்ட செய்தியாளர் பத்மநாபன் மற்றும் ஒளிப்பதிவாளர் மோகன் உள்ளிட்டோர் மீது இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தரப்பு குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த இருவரும், எழுந்து நிற்க முடியாமல் தடுமாறி விழுந்தனர். பின்னர் அருகிலிருந்த மற்ற செய்தியாளர்கள் அவர்களை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று தண்டையார் பேட்டை பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில் இருவரையும் அனுமதித்தனர். அங்கு செய்தியாளர் பத்மநாபன், ஒளிப்பதிவாளர் மோகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தரப்பினரின் இந்த அராஜக நடவடிக்கையை வேடிக்கை பார்த்த காவல்துறையினரின் செயல், பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், இங்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என மருத்துவமனை நிர்வாகத்தினரை மிரட்டியதோடு, அங்கிருந்து செல்லுமாறு, ஜெயா டிவி செய்தியாளர் பத்மநாபன், ஒளிப்பதிவாளர் மோகன் உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுத்தனர்.
காவல்துறையினரின் இந்த அராஜக செயலை, அங்கிருந்த செய்தியாளர்களும், பொதுமக்களும் தட்டிக்கேட்டனர்.