பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் - சக ஆய்வாளரின் துப்பாக்கி வெடித்ததால் மரணம் : ராஜஸ்தான் காவல்துறை புதிய தகவல் - முனிசேகர் மீது வழக்குப்பதிவு
Dec 17 2017 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது தமிழக காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டதில் திடீர் திருப்பமாக, அவருடன் சென்ற சக காவல் ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டதன் காரணமாகவே இச்சம்பவம் நேரிட்டதாக ராஜஸ்தான் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. அம்மாநில அரசின் இந்த புதிய விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் பகுதியில் நடந்த நகைக்கொள்ளை சம்பவமாக மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் தலைமையிலான தனிப்படையினர் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் புறப்பட்டுச் சென்றனர். அங்குள்ள பாலி மாவட்டத்தில் கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் சுட்டதில் பெரியபாண்டியன் அதே இடத்தில் உயிரிழந்ததாகவும், மற்றொரு காவல் ஆய்வாளர் முனிசேகரன் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, தமிழக காவல்துறை உயரதிகாரிகள் குழு ராஜஸ்தானுக்கு சென்று சம்பவ பகுதியை நேரில் பார்வையிட்டது. இந்த நிலையில், கொள்ளையர்களில் ஒருவரான தினேஷ் சவுத்ரி உள்ளிட்ட சிலரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும், காவல்துறையினரை தாக்கியவர்களையும் கைது செய்து சென்னைக்கு அழைத்துவரும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பெரியபாண்டியன், சக காவல்ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாகவே உயிரிழந்ததாக ராஜஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது. வல்லுநர்களின் ஆய்வு இதனை உறுதிப்படுத்துவதாகவும், அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதால், பெரியபாண்டியன் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.