உடல்நலக் குறைவால் காலமான 'புதிய பார்வை' ஆசிரியர் திரு. ம. நடராசனின் உடல், தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவிடத்திற்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், திரையுலகினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு, மறைந்த திரு. ம. நடராசனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மாவின் கணவரும், 'புதிய பார்வை' ஆசிரியருமான திரு. ம.நடராசன், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலை காலமானார். அவரது உடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், திரு. ம. நடராசனின் உடல், தஞ்சாவூரில் உள்ள அருளானந்த நகர் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா, தஞ்சாவூர் சென்று, மறைந்த கணவர் திரு. ம. நடராசனின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அப்போது, சின்னம்மாவின் சகோதரர் திரு. திவாகரன், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.
மறைந்த திரு. ம. நடராசன் உடலுக்கு, உறவினர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், திரையுலகினர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் அருளானந்த நகரிலிருந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், திரு. ம. நடராசனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அரசியல்கட்சித் தலைவர்கள் தமிழ் பற்றாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். சாலையின் இருமருங்கிலும் ஏராளமானோர் திரண்டு நின்று, திரு. ம. நடராசனுக்கு கண்ணீரஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவிடத்திற்கு எதிரே உள்ள இடத்தில், திரு. ம. நடராசனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர், துயரமே உருவாக, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.