பினாமிகளின் துணையுடன் அமைச்சர் காமராஜ் மணல் கொள்ளை - வளமான நன்னிலம் பகுதி பாலைவனமாகும் அவலம் - மக்கள் வேதனை
Mar 22 2018 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீர்வளம் மிக்க வளமான பகுதியாக இருந்து வந்த நன்னிலம், அமைச்சர் பினாமிகளின் மணல் கொள்ளையால் பாலைவனமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட நன்னிலம் பகுதி மட்டுமின்றி சட்டமன்றத் தொகுதி முழுவதும் கனிமவளங்கள் நிறைந்து இருப்பதாலும், நிலத்தடி நீரானது பூமி மட்டத்தில் இருந்து 15 அடி ஆழத்தில் கிடைக்கப் பெறுவதாலும் நெல் சாகுபடி, கரும்பு, பருத்தி, தென்னை, வாழை, காய்கறி உள்ளிட்ட அனைத்து விதமான சாகுபடி பணிகளும் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருவதால், இத்தொகுதி நல்ல வளமான நிலத்திற்கு அடையாள சின்னமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த தொகுதியில் அமைச்சர் ஆர். காமராஜின் பினாமிகளால் உருவாக்கப்பட்ட மணல் குவாரிகளால் வளமான நிலங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறி வருகிறது. மேலும் இப்பகுதியின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கச்சா எண்ணெய் எடுக்கும் வகையில் ONGC நிறுவனம் மூலம் பலநூறு அடி ஆழத்திற்கு எண்ணெய் கிணறு அமைத்தல் போன்ற பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. நிலத்தடி நீர்மட்டத்தை பாழ்படுத்தி வரும் இத்திட்டத்தினை கைவிடக்கோரி தமிழக அரசை எதிர்த்து நன்னிலம் பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் மீது எடப்பாடி நிர்வாகம், காவல்துறையைக் கொண்டு தடியடி நடத்தி பணிகள் தொய்வின்றி நடைபெற முழு பாதுகாப்பு அளித்தது.
இதனிடையே குவளைக்கால் என்ற கிராமத்தில் விளை நிலத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் 12 மணல் குவாரிகள் அமைத்துள்ள அமைச்சர் ஆர். காமராஜின் பினாமிகள், நாள் ஒன்றுக்கு சுமார் 700 முதல் ஆயிரம் லாரிகள் வரையில் மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வருகின்றனர். மேலும் மணல் குவாரிகளுக்கு வந்து செல்லும் ஏராளமான லாரிகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. ஆகையால் மணல் குவாரியை மூடக்கோரியும், மணல் லாரி போக்குவரத்துக்கு ஏதுவாக பாசன வாய்க்காலை தூர்க்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
ஒருவாராத்திற்குள் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மணல் குவாரியை முற்றுகையிட்டு மணல் லாரிகளை சிறை பிடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.