மாண்புமிகு அம்மாவின் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை எடப்பாடி நிர்வாகம் முனைப்புடன் முன்னெடுத்துச் செல்ல தவறிவிட்டதாக கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டியுள்ளார். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதன் அவசியத்தை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, மழைநீர் வடிகால்களை இல்லங்களில் அமைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன், உலக நீர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீரின்றி அமையாது உலகு" என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துரைத்து, நீரின் இன்றியமையாத தன்மையை உலகத்திற்கு சொன்ன தமிழகத்தில், இன்று, நீரின் தேவையானது போராட்ட வடிவங்களை எடுத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்குப் பெறவேண்டிய நீரைப் பெறுவதும், நீர் நிலைகள் மாசடையாமல் காப்பதும், சிக்கனமாக நீரைப் பயன்படுத்துவதும், நீரைச் சேமித்திடும் திட்டங்களைத் தீட்டுவதும், நாம் முன்னெடுக்க வேண்டிய மிக முக்கியப் பணிகள் என அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீட்டில் நாம் பெற வேண்டிய நீரை பெறுவதற்கு, பல ஆண்டுகளாக பெரும் போராட்டத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அதை நடைமுறைப்படுத்த இந்நிமிடம் வரை விருப்பமில்லாதது போலவே மத்திய அரசு செயல்படுகிறது - இச்சூழலில்தான், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைத்திட வலியுறுத்தி, வரும் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, தஞ்சை திலகர் திடலில், மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
புரட்சித்தலைவி அம்மா கொண்டுவந்த மழைநீர் சேமிப்புத் திட்டம் உலக அரங்கில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது - மழை நீர் சேமிப்புத் திட்டத்தையும் இம்மாநில அரசு முனைப்போடு முன்னெடுத்துச் செல்லத் தவறிவிட்டது - ஆகவே, நாமே நமது இல்லங்களில் மழை நீர் வடிகால்களை சீரமைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதன் அவசியத்தை இத்தருணத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பேரெழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தில், நீர் மேலாண்மை குறித்த கருத்துகளை மிக அழுத்தமாக வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள திரு. டிடிவி தினகரன், தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள், இதற்குரிய கவனத்தை உரிய முறையில் செலுத்தாதபோது, நாம் ஒவ்வொருவரும் இதன் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு நமது பங்கினை ஆற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
"நீர் சவால்களுக்கு இயற்கை அடிப்படையிலானத் தீர்வு" - இது இவ்வாண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருளாகும் என்றும், வருங்காலத் தலைமுறை வாழத் தகுதியுள்ள இடமாக இப்பூமியை வைத்திருப்பதே நமது தலையாயக் கடமையுமாகும் என திரு. டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.