காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபாவின் மரணத்தை கண்டித்தும், அதற்கு நீதி கேட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எட்டு வயது சிறுமி ஆஷிபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்தும், ஆஷிபாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் ஆஷிபாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடத்தப்படு வருகின்றன.
தூத்துக்குடியில் சிறுமி ஆஷிபாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிறுமி ஆஷிபாவுக்கு அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மதுரை பழங்காநத்தம் சந்திப்பில், அகில இந்திய மகிளா சமஸ்கிருத சங்கம் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பள்ளி - கல்லூரி மாணவிகள், ஆஷிபாவின் படுகொலையை கண்டிக்கும் விதமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியடி, முழக்கங்களை எழுப்பினர்.
நெல்லை மாவட்டம் பேட்டையில், நேஷனல் விமன்ஸ் பிரன்ட் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏராளமானோர் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
திருச்சி அண்ணாசிலை அருகே, வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் இணைந்து, கண்டண ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆஷிபா மரணத்துக்கு நீதி கேட்டு முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி ஆஷிபாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
சிறுமி ஆஷிபா படுகொலையை கண்டித்தும், அதற்கு காரணமாக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல், அஜந்தா திரையரங்கு சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய மஜ்லிஸே அமைப்பினர் பலர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.