சென்னையை அடுத்த பொன்னேரியில் தனியார் பள்ளியில் ஆய்வு : பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை
May 17 2018 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆய்வு நடத்திய பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட நான்கு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஏழை மாணவர்களுக்கு அரசு உத்தரவுப்படி 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அப்பள்ளிக்கு விரைந்த தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி துறை ஆய்வாளர் அருள் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அரசு விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
ஏழை நடுத்தர வர்க்க மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென மாணவர்களின் பெற்றோர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.