கோவையில் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாக்குதலுக்குள்ளான கழகத் தோழர்கள் மீது பொய் வழக்குப் புனைந்து கைது செய்துள்ள மக்கள் விரோத பழனிசாமியின் ஏவல்துறையாக செயல்படும் காவல்துறையினருக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உண்மைக் குற்றவாளிகளை தப்பவைக்க காவல்துறை துணைபோகுமேயானால், கோவையில் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும், கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் திரு. சேலஞ்சர் துரை தலைமையில் உறுப்பினர் சேர்க்கைக்கான செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஆளும் தரப்பினரின் அழுத்தத்திற்கு அடிபணிந்து கழக நிகழ்ச்சிகளை நடத்திடாதவாறு காவல்துறையினர் தடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பகுதிச் செயலாளர் இல்லத்தில் கழக உடன்பிறப்புகள் அந்நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டு திரும்பும் வழியில், அவர்கள் பயணித்த வாகனங்களை சமூக விரோதிகள் கடுமையாக சேதப்படுத்தியதோடு, கொடூர ஆயுதங்களைக் காட்டி கழக மகளிர் அணியைச் சேர்ந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுள்ளனர் - இந்தக் கொடியத் தாக்குதலை வடவெள்ளி காவல்நிலையத்தின் முன்பாகவே சமூக விரோதிகள் அரங்கேற்றியுள்ளனர் - இக்கொடூரத் தாக்குதல் உள்ளூர் அமைச்சர் வேலுமணி உத்தரவின்பேரில்தான் நடத்தப்பட்டுள்ளதாக கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர் - காவல்துறையைத் தொடர்ந்து கேலிப்பொருளாக்கும் பழனிசாமியின் ஆட்சியில் நேற்று நடந்த கோவைச் சம்பவம் மற்றுமொரு எடுத்துக்காட்டு என திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கழக உடன்பிறப்புகளும், நிர்வாகிகளும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டபோது, காவல்துறையினர் தாக்குதலுக்குள்ளான கழகத்தினரை தனியார் மண்டபத்தில் நேற்று இரவு முதலே அடைத்து வைத்ததுடன், தற்போது அவர்கள் மீது பொய் வழக்குகளை புனைந்தும் கைது செய்துள்ளனர் - கோவை தங்களுக்கு பாத்தியப்பட்ட பகுதிபோலவும், சர்வாதிகார பிரதேசம் போலவும், சட்டத்தை முடக்கி வைத்திருக்க முனையும் ஆளும் கட்சியின் வன்முறை அரசியலுக்கும், கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையினருக்கும் தமது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் - அவர்களை விடுவிக்காமல், உண்மைக் குற்றவாளிகளை தப்பவைக்க உள்ளூர் அமைச்சர் முயற்சி செய்தால், அந்த முயற்சிக்கு காவல்துறை துணைபோகுமேயானால், கோவையில் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.
சுழன்று பணியாற்றும் வீரு கொண்ட கழக தோழர்கள் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடத்தி அவர்களை முடக்க நினைக்கும் மூடத்தனத்தை ஆளும் தரப்பு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என திரு. டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.