கொடைக்கானலில் 57-வது மலர் கண்காட்சியுடன் கோடைவிழா : நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் இடம்பெற்றன
May 19 2018 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இன்று 57வது மலர் கண்காட்சியுடன் கோடைவிழா தொடங்குகிறது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இந்த ஆண்டிற்கான கோடை விழா இன்று ப்ரையண்ட் பூங்காவில் கோலாகலமாக சுற்றுலாப்பயணிகள் முன்னிலையில் தொடங்க உள்ளது. இந்த கோடைவிழாவையொட்டி, அலங்கார படகுகளின் அணிவகுப்பு, வாத்து பிடிக்கும் போட்டி, நாய்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் வரும் 28ம் தேதிவரை 10 நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக பிரசித்திபெற்ற 57வது மலர்க்கண்காட்சி இன்று தொடங்குகிறது. 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களுக்கு மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் டையிங்டேஸ், மேரிகோல்டு, கிங் ஆஸ்டர், பேன்ஸி உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண மலர்கள் நடவு செய்யப்பட்டு பூத்துக் குலுங்குகின்றன. மேலும் பல வண்ண ரோஜா மலர்களும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்க தயாராக உள்ளன.
கொய்மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள தாஜ்மகால், ஹைபிரஸ் இழைகளால் வடிவமைக்கப்பட்டுள்ள குதிரை, யானை மற்றும் மயில் உள்ளிட்ட உருவங்கள் சுற்றுலாப்பயணிகளை குறிப்பாக குழந்தைகளை வெகுவாக கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இன்று முதல் தொடர்ந்து 2 நாட்கள் சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
இதேபோல், நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் 3 நாள் கோடைவிழா கண்கவர் கிராம கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதில் இடம்பெற்றிருந்த மணல் சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் இடம்பெற்றிருந்தன. தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சியில் பல்வேறு மலர்கள், காய்கறிகள், கொய் மலர்கள், பழங்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
பரதநாட்டியத்துடன் துவங்கிய கலைவிழாவில், நையாண்டி மேளம், குறவன்குறத்தி ஆட்டம், கரகாட்டம், பச்சைக்காளி பவளக்காளி ஆட்டம், வீரன் ஆட்டம், தீபந்தத்தில் விளையாடும் வீரவிளையாட்டு, சுவாமி வேடமணிந்த ஆட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் ஆட்டம், உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சியும், நாளை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியை கண்டுகளிக்க வருவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.