திருவாரூரில் குறுவை தொகுப்புத் திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்வதில் அமைச்சரின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு மாவட்ட ஆட்சியர் கடும் எதிர்ப்பு - வேளாண்மைத்துறை இயக்குநரை கொண்டு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்ததால் பரபரப்பு
Jul 14 2018 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குறுவை தொகுப்புத் திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்வதில் அமைச்சர் காமராஜின் அதிகார துஷ்பிரயோகத்தால் கடும் அதிருப்தி அடைந்த மாவட்ட ஆட்சியர், வேளாண்மைத்துறை இயக்குநரை கொண்டு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில், குறுவை தொகுப்பு திட்டத்தை அமைச்சர் காமராஜ் இன்று தொடங்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பயனாளிகள், ஆளுங்கட்சியை சேர்ந்த விவசாயிகளாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அமைச்சர் குறுவை தொகுப்பு திட்டத்தினை தொடங்கி வைப்பதற்கு முன்னதாகவே, வேளாண்மைத் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தியை கொண்டு நேற்று, உண்மையான விவசாயிகளை தேர்வு செய்து குறுவை தொகுப்பு திட்டத்தினை, மன்னார்குடி, வடுவூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கி வைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியரை எச்சரித்ததுடன், வேளாண்மைத்துறை இயக்குநர், குறுவை தொகுப்பு திட்டத்தினை தொடங்கி வைத்த செய்தி, வெளிவரக்கூடாது என செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மக்கள்விரோத எடப்பாடி அரசின் இத்தகைய அதிகார துஷ்பிரயோக போக்கு விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.