முதுமலை புலிகள் காப்பகத்துடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள சீகூர், சிங்கரா வனப்பகுதியினுள், வனத்துறையினரின் சூழல் சுற்றுலாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 பழங்குடியின கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். யானைகள் வழித்தடத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, வனத்துறை சுற்றுலா நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இயற்கை தன் பேரழகின் ஒரு துளியை சிந்திவிட்டு போன இடத்தில் முளைத்த எழில் மங்கைதான் உதகை எனப்படும் ஊட்டி... பழந்தமிழரின் வாழ்க்கை முறையைப் பொருத்தவரை, மலையும் மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியாக அடிக்கோடிடப்பட்டு காட்டப்படும் நீலகிரி மாவட்டத்தில், மலைகளால் சூழப்பட்டு, அழகென்ற மலர்களால் ஆளப்படும் குளிர்தேசம் ஊட்டி...
சாதாரண கண்களாலும், காமிரா என்ற சாதனத்தின் கண்களாலும் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், புது அழகு ஒன்று தென்படுவதுபோலவே தெரிகிற ஊட்டி, சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.
மலைகளின் அரசிக்குள் முகம் புதைத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுரகிலோ மீட்டர் பரப்பரளவு கொண்டது. இங்கு யானைகள், புலிகள், சிறுத்தை, கரடி, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் ஆகியவற்றுக்கு முதுமலை புலிகள் காப்பிடம் தான் வசிப்பிடம்... புலிகள் காப்பகத்துடன் தற்போது சிங்காரா, சீகூர், தென்குமரடா ஆகிய மூன்று வனப்பகுதிகளும் புதிதாக இணைக்கப்பட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வனப்பகுதிகளும் புலிகள் காப்பகத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் சிங்காரா, சீகூர் வனப்பகுதிகளில் முதற்கட்டமாக சுற்றுலா நடத்த, புலிகள் காப்பக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால், சிங்காரா, சீகூர் வனப் பகுதிகளை, முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கக் கூடாது என மசினகுடி பகுதி மக்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், தற்போது, சீகூர் வனப்பகுதிக்குள் வாகன சவாரி செய்ய வனத்துறை எடுத்துவரும் நடவடிக்கைக்கு, ஆனைக்கட்டி உள்ளிட்ட ஏழு ஆதிவாசி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே முதுமலை மசினகுடி வனப்பகுதியில், வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை ஆங்காங்கே வீசுவதால், வனச்சூழல் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வனப்பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பு மேலும் மோசமடையும் என கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனயைடுத்து, ஆனைக்கட்டி, சிரியூர், சொக்கநல்லி, வாழைத்தோட்டம், மாவனல்லா உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆதிவாசி மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சீகூர் மற்றும் சிங்கார வனப்பகுதியில் வாகன சவாரி மேற்கொள்ளும் திட்டத்தை வனத்துறை கொண்டுவரக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யானைகள் தங்கி வாழும் வனப்பகுதிகளில், இதுபோன்ற சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்துவது, உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் செயல் எனவும் பழங்குடியின மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் இந்த அரசு மேற்கொள்ளக்கூடாது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.