நாகையில் மாணவர்களே இல்லாத பள்ளிக்கு உயிரூட்டிய கனவு ஆசிரியர் : தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப்பள்ளியை மாற்றிய ஆசிரியரின் முயற்சி
Jul 15 2018 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூரில் அரசு பள்ளி ஒன்றில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில் ஆசிரியர் ஒருவரின் முயற்சியால் பள்ளிக்கு உயிரூட்டியுள்ளார்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர், ராமகோவிந்தன் காட்டில் கடந்த 1962 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த பள்ளியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஒரு மாணவர் கூட இல்லாததால் பள்ளி மூடப்பட்டது. பின்னர் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் பள்ளி தொடங்கப்பட்டது. ஒரு மாணவன் கூட இல்லாத இப்பள்ளியில் தற்போது ஆசிரியர் சுப்பிரமணியனின் பெரும் முயற்சியின் காரணமாக 33 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆசிரியர் சுப்பிரமணியனின் கடும் உழைப்பையும், செயல் திறனையும் கண்ட கிராம மக்கள் இந்த அரசு பள்ளியில் தங்களுடைய குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆசிரியர் சுப்ரமணியனின் தீவிர முயற்சியால் பள்ளி மீண்டும் புத்துயிர் பெற்று செயல்பட்டு வருகிறது.
இவருடைய வழிகாட்டுதலுடன் பள்ளி வகுப்பறையில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் காகிதங்களை கொண்டு செய்து வகுப்பறையை மாணவ, மாணவிகள் மாற்றியமைத்துள்ளனர். பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை எடுத்துக் கொண்டு தனியார் பள்ளியை விட சிறந்த பள்ளியாக அரசு பள்ளியை மாற்றும் முயற்சி ஈடுபட்டு அதில் வெற்றி கண்டு வரும் ஆசிரியர் சுப்பிரமணியனுக்கு "கனவு ஆசிரியர் விருது" வழங்கப்பட்டுள்ளது.