காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் கனமழை - கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சம் கன அடி உபரி வெளியேற்றப்படுவதால், காவிரிக்கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Jul 15 2018 6:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்படுவதால், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் உள்ள காவிரிக்கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடகாவின் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் போன்ற அணைகளில் தண்ணீர் கடல்போல் ததும்பி நிற்கிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 60 ஆயிரம் கன அடி நீரும், கபினியிலிருந்து வினாடிக்கு சுமார் 40 ஆயிரம் கன அடி நீரும் என மொத்தம் 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.
அங்கிருந்து மேட்டூருக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்திருப்பதால், அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு சுமார் 80 ஆயிரம் கன அடியாக அதிகரித்திருப்பதால், அணையின் நீர்மட்டம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.