பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் ரோபோ கண்டுபிடிப்பு : கும்பகோணம் நகராட்சியில் முதன்முறையாக அறிமுகம்
Jul 21 2018 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்திலேயே முதன் முதலாக பாதாள சாக்கடை அடைப்பை சுத்தம் செய்ய ரோபோ ஒன்றை கும்பகோணம் நகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பாதாள சாக்கடையை மனிதர்கள் சுத்தம் செய்வது தடுக்கப்படும்.
ஆன்மீக நகரம்... குப்பையில்லா நகரம்… சுத்தமான சாலைகள் கொண்ட நகரம்... என பல முன்னுதாரணங்களுக்கு, கும்பகோணம் நகராட்சி எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கடந்த 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் - கொள்ளிடம் ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் - பல லட்சம் டன் குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தும் திட்டம் என இந்த திட்டங்கள் தமிழகத்திலேயே கும்பகோணத்தில் தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரிசையில், தற்போது மற்றுமொரு வளர்ச்சியாக, பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பை சுத்தம் செய்ய ரோபோ ஒன்றை கும்பகோணம் நகராட்சி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட்ட கும்பகோணம் நகராட்சிப் பகுதியில், மொத்தம் 5 ஆயிரத்து 309 பாதாள சாக்கடை தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டிகளில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு இதற்கென பிரத்யேக லாரி மூலம் நகராட்சி ஊழியர்களால் அடைப்பு நீக்கப்பட்டு வந்தது. ஆனால் லாரிகள் செல்ல முடியாத பகுதிகளில், மனிதர்களே பாதாள சாக்கடைக் குழியில் இறங்கி சுத்தம் செய்யும் நிலை இருந்ததால், விஷவாயு கசிந்து மனிதர்கள் உயிரிழக்கும் அபாயமும் இருந்தது. இதற்கு மாற்று முயற்சியாகவும், அபாயத்தில் இருந்து முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், தேவையான நடவடிக்கையைகும்பகோணம் நகராட்சி மேற்கொண்டது. அதன் அடிப்படையில், பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ரோபோவை ஈடுபடுத்த, நகராட்சி முடிவு செய்தது. கேரளா மாநிலம் குட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் இணைந்து, 10 லட்சம் ரூபாய் செலவில், இதற்கான ரோபோவை உருவாக்கியுள்ளனர். படிக்கும் போதே பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு ரோபோவை உருவாக்கிய மாணவர்கள், தற்போது பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு முதன்முதலாக திருவனந்தபுரம் மாநகராட்சியில் ரோபோவை அறிமுகப்படுத்தினர்.
இதனை அறிந்த கும்பகோணம் சார் ஆட்சியர் திரு. பிரதீப்குமார் மற்றும் நகராட்சி ஆணையர் திருமதி. உமாமகேஸ்வரி ஆகியோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் நிதி உதவியுடன் கும்பகோணத்தில் இதனை அறிமுகப்படுத்தினர். இதனை வடிவமைத்த பொறியியல் மாணவர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். மிகவும் எளிதாக இயக்கக் கூடிய இந்த ரோபோவின் செயல்பாடுகளை நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை ஆணையர் திரு. பிரகாஷ் மற்றும் சார் ஆட்சியர் திரு. பிரதீப் குமார், நகராட்சி ஆணையர் திருமதி. உமா மகேஸ்வரி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
இதே போன்று தமிழகம் முழுவதும் இது போன்ற ரோபோக்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 58 நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இது போன்ற ரோபோவின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு மற்ற நகராட்சிகளிலும் இது அறிமுகம் செய்யப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
1992, 2004, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கும்பகோணம் மகாமகப் பெருவிழாவிற்காக சிறப்பு நிதி ஒதுக்கி, கும்பகோணம் நகராட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா என்றால் அது மிகையல்ல. இதனை பின்பற்றி முற்போக்கான நடவடிக்கைகளுடன் மற்ற நகராட்சிகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் கும்பகோணம் நகராட்சிக்கு, பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.