கடைமடையில் பல்வேறு பகுதிகளுக்கு காவிரி நீர் இதுவரை வந்து சேரவில்லை : சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி சேதம் - விவசாயிகள் வேதனை
Aug 14 2018 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடைமடையில் பல்வேறு பகுதிகளுக்கு காவிரி நீர் இதுவரை வந்து சேராத காரணத்தால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். முறைவைக்காமல் தொடர்ச்சியாக தண்ணீரை திறந்துவிடவும், கிளை வாய்க்கால்களை விரைந்து தூர்வாரவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறந்துவிடப்பட்டு பல நாட்கள் ஆகியும் கடைமடை பகுதியான, நாகையின் பல்வேறு பகுதிகளுக்கு காவிரி நீர் வந்து சேராத காரணத்தால், விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். திருமருகல் ஒன்றியத்தில் முடிகொண்டானாறு, திருமலைராஜனாறு, அரசலாறு, வடக்குப் புத்தாறு, தெற்குப்புத்தாறு, வளப்பாறு, நரிமணியாறு, ஆழியானாறு, பராவடையானாறு ஆகிய ஆறுகள் மூலம் பாசனம் பெற்று விவசாயிகள் சுமார் 13-ஆயிரம் எக்டேர் பரப்பில் குருவை, சம்பா, தாளடி என 3-போகம் சாகுபடி செய்து வந்தனர். தண்ணீர் வராத காரணத்தால் கடந்த 5-ஆண்டுகளாக சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 19-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்தும், 22ந்தேதி கல்லணையிலுருந்தும் டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், 10-நாட்கள் ஆகியும் இன்னும் திருமருகல் கடைமடை ஆறுகளுக்கும், கிளை வாய்க்கால்களுக்கும் காவிரி நீர் வந்து சேராத காரணத்தால் காவிரி நீரை நம்பி பயிரிட்ட சுமார் 10ஏக்கர் நெற்பயிர்கள் கருகியதால், அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.