இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சந்திரசேகர் தான் நிரபராதி என்பதை அறியாமலேயே மறைந்து விட்டார் : மிகவும் துன்பத்திற்கு ஆளானதாக சந்திரசேகரின் மனைவி கண்ணீர்
Sep 19 2018 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உளவு பார்த்ததாக பழி சுமத்தப்பட்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சந்திரசேகரை குற்றமற்றவர் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. ஆனால் தான் நிரபராதி என வந்த தீர்ப்பை அறியாமலேயே விஞ்ஞானி சந்திரசேகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ'வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர், கே.சந்திரசேகர். இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை 1994-ம் ஆண்டு விஞ்ஞானிகள் நம்பி நாராயணன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை மேற்கொண்ட கேரள மாநில போலீசார் அவர்களை கைது செய்தது.
பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், நம்பி நாராயணன், சந்திரசேகர் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றது என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. மேலும் மனரீதியாக துன்புறுத்தப்பட்ட நம்பி நாராயணனுக்கு கேரள அரசு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மேல்முறையீட்டு வழக்கை மிகவும் எதிர்ப்பார்த்திருந்த சந்திரசேகர், தீர்ப்பு வெளியான தினமான கடந்த வெள்ளி அன்று காலையில் திடீரென கோமா நிலைக்கு சென்றார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசேகர், கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்தார்.
தீர்ப்பு வெளியான அன்று விஞ்ஞானி சந்திரசேகர், திடீரென கோமா நிலைக்கு சென்றதாக கூறிய அவரது மனைவி விஜயம்மா, தீர்ப்பில் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்ததாகவும் கூறினார்.
ஆனால் இந்த வழக்கில் தான் நிரபராதி என்பதை அறியாமலேயே அவர் மறைந்து விட்டதாகவும், இந்த வழக்கினால் தாங்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானதாகவும், விஞ்ஞானி சந்திரசேகரின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்தார்.