தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு தொடரும் உயிரிழப்புகள் - சென்னையில் டெங்குவால் சிறுவன் உயிரிழந்த சோகம்
Oct 23 2018 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை நெருங்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத் திறமையின்மையால் தொற்றுநோய்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தாக்கி இதுவரை 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்துநகர் பகுதியில் வசித்து வரும் சாதிக்பாஷா என்பவரின் இரண்டரை வயது குழந்தை ஷபி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு தனது மெத்தனப்போக்கை கைவிட்டு, டெங்கு, பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பெண் துணை பேராசிரியை பலியானதை தொடர்ந்து மேலும் 5 பேர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவீரப்படுத்தபட்டு உள்ளதாக அவர் கூறினார்.