தென்சென்னை பகுதியில் தொடர் கொலைச் சம்பவங்கள் : மக்கள் நடமாட்டம்மிக்க பகுதிகளில் அதிகரிக்கும் குற்றங்கள்
Oct 23 2018 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்சென்னை பகுதியில் தொடர் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவா என்ற ரவுடி முன்விரோதம் காரணமாக ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். சாந்தோம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் நொச்சிகுப்பத்தை சேர்ந்த விஜய் என்பவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடைபெற்று 24 மணி நேரம் ஆவதற்குள், ஐஸ்அவுஸ் பெசன்ட் சாலையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் அப்பாஸ் என்பவரை, இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிச் சாய்த்தது. முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் எனக்கூறப்படும் நிலையில், அவரது உடலை போலீசார் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த மூன்று கொலை சம்பவங்களும் இரவில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் மக்கள் நடமாட்டம் மிக்க இடங்களில் நடந்துள்ள இந்த கொலை சம்பவங்கள், காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.