கஜா புயல் காரணமாக முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் கரையை கடக்கும் போது நூறு கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், பொதுமக்கள் புயல் சமயத்தில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று நாகை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாகை மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வருகை தந்துள்ளனர்.
பூம்புகார், வேதாரண்யம், பழையாறு துறைமுகங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கஜா புயலை முன்னிட்டு அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டுள்ளனர். 25 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் காரைக்காலுக்கு வந்து சேர்ந்தனர். பேரிடரில் இருந்து மக்களை மீட்கும் வகையில் பல்வேறு விதமான உபகரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கிக் கொள்பவர்களை மீட்க ஆயிரம் கிலோ எடையை தாங்கக் கூடிய ரப்பர் படகு கொண்டு வரப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து காரைக்கால், திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர், வேளாங்கண்ணி, நாகை பகுதிகளுக்கு செல்லும் 15 ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக காரைக்கால் - சென்னை கம்பன் விரைவு ரயில், காரைக்கால் -வேளாங்கண்ணி இணைப்பு ரயில், நாகை- வேளாங்கண்ணி ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து புறப்படும் காரைக்கால் விரைவு ரயில் நாகப்பட்டினத்தில் இன்று காலை நிறுத்தப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில், கஜா புயல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு கண்காணிப்பு அலுவலர் திரு.குமார் ஜெயந்த் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் திரு.அண்ணாதுரை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். கடற்கரை பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
கஜா புயல் பாம்பன் பகுதியை கடக்க இருப்பதை முன்னிட்டும், புயலின் வேகம் அதிகரித்துள்ளதன் காரணமாகவும், கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கீரிப்பாறை உள்ளிட்ட மலையோர பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. முன்னெச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.
புதுச்சேரியில் கஜா புயல் தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுத்ரி தலைமையில் நடைபெற்றது. கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என்றும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், அரசு ஏற்பாடு செய்துள்ள இடத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
புதுச்சேரியில் மழை நீர் தேங்கும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.