நாகை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் - பிற பகுதிகளுடன் வேதாரண்யம் துண்டிப்பு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Nov 16 2018 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல், நாகை மாவட்டத்தை புரட்டிப் போட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அதி தீவிர கஜா புயல் நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே நள்ளிரவு 12.30 மணி முதல் 2.30 மணியளவில் கரையைக் கடந்தது. இந்தப் புயலின் தாக்கம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்டது. புயல் கடந்தபோது, அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததுடன், பலத்த காற்று வீசியதால் ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் நேற்றிர முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, மீட்பு படையினர் இரவு முழுவதும் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அக்கரைப்பேட்டை, கல்லார், உள்ளிட்ட சில மீனவ கிராமங்களில் கடல் நீர் உட்புகுத்தது. மழையை பொருத்தவரை நாகையில் அதிகப்பட்சமாக 40.48 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தரங்கம்பாடியில் குறைந்தளவாக 10.50 மில்லி மீட்டர் மழை பெய்தது. முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக 137 பாதுகாப்பு முகாம்களில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிக பாதிப்புக்குள்ளான பகுதியாக வேதாரண்யம் நகர் அறிவிக்கப்பட்டது. அந்தப் பகுதி மற்ற இடங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டன. அவற்றை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.