தீவிர புயலான கஜா, நாகை - வேதாரண்யம் இடையே அதிகாலை 2 மணியளவில் கரையை கடந்தது - அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
Nov 16 2018 6:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீவிர புயல் கஜா நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
கஜா புயலின் கண்பகுதி நள்ளிரவில் கரையைக் கடக்கத் தொடங்கியபோது நாகை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று வீசியது. பின்னர் புயல் கண் பகுதி முழுமையாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தீவிரப் புயல் கஜா நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே நள்ளிரவு 12.30 மணி முதல் 2.30 மணியளவில் கரையைக் கடந்தது. அதிராமபட்டினத்தில் அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. மேற்கு நோக்கி நகர்ந்துள்ள தீவிர கஜா புயல் சில மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், திருச்சி உள்ளிட்ட உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் நள்ளிரவு கரையை கடக்க தொடங்கியபோது, நாகை வேதாரண்யம், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் அளவு படிப்படியாக அதிகரித்தது. தரங்கம்பாடி, பொறையாறு, சந்திரப்பாடி கோடியக்கரை வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கடற்கரையோர கிராமங்களில் கனமழை பெய்தது. மயிலாடுதுறை, மணல்மேடு, மங்கைநல்லூர், செம்பனார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாகை, வேதாரண்யம் பகுதிகளில் பலத்த மழையால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததுடன் மரங்கள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மயிலாடுதுறை வழியாக சென்னை செல்லும் உழவன், கம்பன், மன்னை, திருச்செந்தூர் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் மயிலாடுதுறையில் நிறுத்தப்பட்டது. காரைக்கால் செல்லக்கூடிய பயணிகள் மற்றும் வெளியூரிலிருந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் என 150க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தங்கியுள்ளனர்.