கஜா புயல் தாக்கம் அதிகமாக இருந்ததால், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் பாலம் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கஜா புயல் தாக்கம் அதிகமாக இருந்ததால், பாம்பன் பாலம் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. பாலத்தின் இருபுறமும் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், கஜா புயல் தாக்கம் காரணமாக ராட்சத மரம் விழுந்து டிரான்ஸ்பார்மரில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. 27 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கடலூர், பண்ருட்டி, வடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் காட்டுமன்னார்கோவில் உட்பட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன்காரணமாக சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடலூர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, கூவத்தூர், கல்பாக்கம், திருப்போரூர், மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசியது. கடல் சீற்றம் அதிகரித்து, கடல் நீர் சுற்றுலாத் தலத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகளுக்குள் புகுந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி, முட்டம், குளச்சல் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் ஆறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.
கஜா புயலை தொடர்ந்து நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 10 ஆயிரம் பேரும், நாகை மாவட்டத்தில் 44 ஆயிரத்து 87 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 குடும்பத்தை சேர்ந்த 26 பெண்கள், 17 குழந்தைகள் உட்பட 61 பேர் கரையூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் கொசுக்கடியால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மர்மக் காய்ச்சல் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.