கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் 15-ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Nov 16 2018 6:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் 15-ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் 111 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் அதிராம் பட்டினத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி திராவிட மணி, உயிரிழந்தார். சிவகொள்ளை பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த, ரமேஷ், தினேஷ், சதீஷ், அய்யாதுரை ஆகிய 4 பேர் பலியாகினர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்துள்ள மேமாத்தூர் கிராமத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அய்யம்மாள் என்ற பெண்மணி உயிரிழந்தார்.
இதேபோன்று குறிஞ்சிப்பாடியில் மின் வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதால் ஆனந்த் என்பவர் உயிரிழந்தார். பண்ருட்டி அடுத்த நடுகுப்பம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் மற்றும் கோவில்வெள்ளி பகுதிகளில் வீடு இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி, ராமகிருஷ்ணன் மற்றும் கனகவல்லி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், கஜா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேம்பையன் என்பவர் மீது மரம் விழுந்து உயிரிழந்தார். தலைஞாயிறு அருகே உள்ள சேரன்குளம் கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்ற முதியவர் வீட்டின் கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார்.