இன்னல்களைத் தாங்கி பசியாற உணவளிக்கும் விவசாய பெருமக்களை வணங்கிடுவோம் - பிறக்கும் தை அனைவர் வாழ்விலும் விடியலை ஏற்படுத்தட்டும் என டிடிவி தினகரன் பொங்கல் வாழ்த்து
Jan 14 2019 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இன்னல்களைத் தாங்கி பசியாற உணவளிக்கும் விவசாய பெருமக்களை வணங்கிடுவோம் என்றும் பிறக்கும் தை அனைவர் வாழ்விலும் விடியலை ஏற்படுத்தட்டும் என்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இதயம் நிறைந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
உழவர் பெருமக்கள் இயற்கையின் அருளாலும், தங்களது கடின உழைப்பினாலும் பெற்ற விளைச்சல்களுக்காக, இறைவனை வணங்குவதோடு, தங்களுடன் உழைத்திட்ட கால்நடைகளுக்கும் நன்றியினை செலுத்திடும் ஒரு உன்னத நாள் பொங்கல் திருநாள் என்றும், இந்த மரபும், மாண்பும், உலகில் வேறெங்கும் இல்லாத அரிய பண்பு என்றும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து, அவர்களின் நல்வாழ்விற்காக பல திட்டங்களைத் தீட்டிய நம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவை, இவ்வேளையில் நினைவு கூறுவதாக குறிப்பிட்டுள்ள அவர், மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் கொண்டாட வேண்டிய பொங்கல் திருநாளை, விவசாய தோழர்கள் மனநிறைவோடு கொண்டாடுகின்றார்களா? என்பதை இந்நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும், நமக்கு நல்வாழ்வளிக்கும் விவசாயத்தின் நிலை தற்போது தமிழகத்தில் கவலைக்குரியதாகவும், கவனத்தில் கொள்ளவேண்டிய நிலையிலும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் பலன் பெறும் வகையில் கொண்டுவரப்படும் விவசாய விரோத திட்டங்கள், விவசாய நிலங்களில் திணிக்கப்படுவதால், விவசாயிகள் கொந்தளிக்கும் மனநிலையோடு ஒவ்வொரு நாளும் போராட்ட களத்திற்குள் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் உள்ளனர் - இதனை தடுத்து நிறுத்தவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு - ஏனெனில், விவசாயத்திற்கும், உணவு உற்பத்திக்கும் மாற்று இல்லை என்பதை இத்தருணத்தில் உணர்ந்திடுவோம் - உணர்த்திடுவோம் என குறிப்பிட்டுள்ள திரு. டிடிவி தினகரன், இவ்வளவு இன்னல்களையும் தாங்கிக்கொண்டு நாம் பசியாற தொடர்ந்து உணவளிக்கும் விவசாய பெருமக்களை வணங்கிடுவோம் என்றும், பிறக்கும் தை அனைவரின் வாழ்விலும் நல்விடியலை ஏற்படுத்தட்டும் என்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.