எத்தனை துன்பங்கள் வந்தாலும் அறம் காத்து தர்மத்தை நிலைநிறுத்திட வேண்டும் - டிடிவி தினகரன் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து
Aug 22 2019 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எத்தனை துன்பங்கள் வந்தாலும் அறம் காத்து தர்மத்தை நிலைநிறுத்திட அனைவரும் உறுதி ஏற்போம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், தீமைகளை அகற்றி, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில், அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இந்நன்னாளில் தங்களின் வீடுகளுக்கு கிருஷ்ணரே நேரில் வருவதாக மாக்கோலமிட்டு, அவருக்குப் பிடித்த பண்டங்களை வைத்து படையலிட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் - ஒவ்வொரு நாளும் இந்த மகிழ்ச்சி நிலைத்திட வேண்டுமென கார்மேக வண்ணனை வணங்குகிறார்கள் - இந்த சிறப்பு வாய்ந்த நாளில் எளியவர்களிடமும் அன்பு பாராட்டி மகிழ்வோம் என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
'குழப்பமும் தடுமாற்றமும் இல்லாமல், தெளிந்த தண்ணீரைப் போல மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், எடுத்த செயலில் வெற்றி பெற்று, மன நிம்மதியோடு வாழலாம்' என்ற கிருஷ்ணரின் கீதை உபதேசத்தை எப்போதும் நினைவில் கொண்டு இலக்குகளில் வெற்றிகளைக் குவித்திடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். எத்தனை இன்னல்கள் வந்தாலும் அறம் காத்து நின்று, அதர்மத்தை வீழ்த்தி, தர்மத்தை நிலை நிறுத்திட கிருஷ்ண ஜெயந்தி நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.