சேலம்-சென்னை 8 வழிச் சாலைத்திட்டம் பாரத் மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா? - பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Aug 22 2019 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டம் பாரத்மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா என பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பாரத்மாலா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில், சென்னை - சேலத்தை இணைக்கும் எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்த விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்திற்கு சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இத்திட்டத்திற்காக விவசாயிகளை அப்புறப்படுத்துவதற்கும், மரங்களை அழிப்பதற்கும் கடந்த ஆண்டு இடைக்கால தடை விதித்தது. மேலும், இத்திட்டத்திற்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவது செல்லாது எனவும் கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று தொடங்கியது. மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் துஷார் மேத்தா, சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே இச்சாலை அமைக்கப்படும் என வாதிட்டார். விவசாயிகள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், இந்த திட்டம் பாரத்மாலா திட்டத்தின் கீழ் வரவில்லை எனவும், மத்திய அரசு விதிமுறைகளை மீறி சென்னை -சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாகவும், குற்றம் சாட்டினர். இதனையடுத்து சென்னை-சேலம் எட்டு வழி சாலை திட்டமானது பாரத்மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா? இத்திட்டத்தில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றவா? என்று உரிய பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, ஓரிரு நாட்களில் நிறைவு செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.