இலங்கையிலிருந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு - கோவையில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், மக்கள் கூடும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பு
Aug 23 2019 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள், கோவையில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கோவையில், மக்கள் கூடும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள், தமிழகத்திற்குள் நுழைந்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 6 தீவிரவாதிகளும் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்திருப்பதாகவும், குறிப்பாக நாகை வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தீவிரவாதிகள், கோவையில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் சைரன் ஒலிக்கச்செய்து, பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர். காந்திபுரம், உக்கடத்தில் அமைந்துள்ள கோயில்கள், சந்தைப் பகுதிகள், பேருந்துநிலையங்கள்போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாத ஊடுருவல் தொடர்பாக டிவிட்டரிலும் தகவல் பதிவிடப்பட்டுள்ளதால் அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ஜே.கே.திரிபாதி உத்தரவின்பேரில், நேற்று நள்ளிரவு முதல் காலை வரை தமிழகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையிலும் தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தியதுடன், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தொடர்ச்சியாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.