கல்வியை தாய்மொழியில் படிப்பது என்பதுதான் முதன்மையானது - நெய்வேலியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு
Sep 16 2019 8:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியை வெறுக்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம் என்பதை மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், கடலூர் மாவட்டம் நெய்வேலி பேருந்து நிலையம் அருகே அண்ணா திடலில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், பொதுக்கூட்ட மேடையில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மாவின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விழாவில் உரையாற்றிய திரு.டிடிவி தினகரன், ஹிந்தி மொழி குறித்து 50 ஆண்டுகளுக்கு முன் பேரறிஞர் அண்ணா கூறிய கருத்துகள் இன்றும் நாட்டிற்கு பொருத்தமாக உள்ளதாகவும், கல்வியை தாய்மொழியில் படிப்பது என்பதுதான் முதன்மையானது என்றும் தெரிவித்தார். இந்தி எதிர்ப்பு போராட்ட சரித்திரம் திரும்ப நடைபெற அனுமதிக்க வேண்டாம் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகவும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
அம்மாவின் கட்சியை மீட்டெடுக்க வேண்டும்- மீண்டும் உண்மையான அம்மா ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிலைப்பாடு என திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.