திருச்சி, நாகை, கும்பகோணம் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தேனியில் பலத்த மழை காரணமாக பேருந்துக்குள் மழைநீர் விழுந்து பயணிகள் குடைபிடித்தவாறு சென்றனர்.
கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, மங்கைநல்லூர், மணல்மேடு, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது. சம்பா பயிருக்காக ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்சியில் தொடர்ந்து 6-வது நாளாக கனமழை பெய்தது. பாலக்கரை, ஸ்ரீரங்கம், தில்லைநகர், உறையூர் மற்றும் விமானநிலையம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதேபோல், திருவெறும்பூர், மாத்தூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
அரியலூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பல மணி நேரம் நீடித்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரியலூர், திருமானூர், தா.பழுர், உடையார்பாளையம், செந்துறை, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், வாலிகண்டபுரம், குன்னம், பாடாலூர், வேப்பந்தட்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. கடந்த 4 நாட்களாக தொடர் மழையால் ஏரி, குளங்கள் மற்றும் கிணறுகள் நிரம்பி வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. மழையால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தேனி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்துகளில், மழை காரணமாக பயணிகளின் இருக்கையில் மழை நீர் விழுந்தது. இதன் காரணமாக பயணிகள் இருக்கையில் அமராமல் நின்று கொண்டே பயணித்தனர். மேலும் பேருந்து உள்ளே குடையை விரித்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.