நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்
Sep 22 2019 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு.எச்.வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். விக்கிரவாண்டி தொகுதி திமுக உறுப்பினரான திரு.ராதாமணி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து, இவ்விரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா அறிவித்தார். இடைத்தேர்தல் அட்டவணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி, இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 30ம் தேதியாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் மாதம் 1ம் தேதி நடைபெறவுள்ளது. போட்டியிலிருந்து விலகுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 3ம் தேதி ஆகும். அக்டோபர் மாதம் 21ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் பதிவாகும் வாக்குகள் 24ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. இவ்விரு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. தற்போதைய நிலையில், தமிழக சட்டசபையில் அதிமுக கூட்டணியின் பலம் 123 ஆகவும், திமுக கூட்டணியின் பலம் 108 ஆகவும் உள்ளது. அடுத்த மாதம் 21ம் தேதி புதுச்சேரி காமராஜ் நகர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியின் உறுப்பினராக இருந்த சபாநாயகர் திரு.வி.வைத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டதால், காமராஜ் நகர் தொகுதி காலியாக உள்ளது.