மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் நலிவடைந்துவரும் பட்டாசு தொழிலை காத்திட வேண்டும் : சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Oct 15 2019 9:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனப் பட்டாசுகள் வருகை, GST வரி உயர்வு, பட்டாசுகளுக்கான புதிய விதிமுறைகள், பட்டாசு வெடிக்க தடை உள்ளிட்ட காரணங்களால், பட்டாசு தயாரிப்பு தொழில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இச்சமயத்தில், நலிவடைந்த பட்டாசு தொழில் குறித்த ஓர் சிறப்பு செய்தி தொகுப்பு...
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் பட்டாசு ரகங்களில், 90 சதவீதம் இங்கு தயார் செய்யப்படுகின்றன. இதனால் சுமார் ஐந்தாயிரம் கோடி வர்த்தகம் நடைபெறும் தொழிலாக இது உள்ளது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 லட்சம் பேர், நேரடியாகவும் மறைமுகமாகவும் இதில் பணியாற்றி வருகின்றனர். 200 வகையான பட்டாசுகள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுப்புறச்சூழல் மாசு ஏற்படுவதால், பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வெளியான இடைக்கால தீர்ப்பில், பட்டாசுகளை தயார் செய்வதற்கும் வெடிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல்வேறு நெருக்கடிகளால் தொழில் நலிவடைந்து, வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலானோர் வெளியூர்களுக்கு வேலை தேடி சென்று விட்டதால், தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை என்ற புதிய நெருக்கடியையும், பட்டாசு தொழில் சந்தித்து வருகிறது. பசுமை பட்டாசுகளை மட்டுமே தயார் செய்திட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, இவ்வகையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக தரைச் சக்கரம், கம்பி மத்தாப்பு, பூந்தொட்டி உள்ளிட்ட பட்டாசுகள் பசுமை பட்டாசுகளாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் கடந்த 4 ஆண்டுகளாக, பட்டாசு தொழில் நலிவடைந்துள்ளது. இந்த சூழலில் மெல்ல மெல்ல தன் பாரம்பரியத்தை இழக்கத் தொடங்கி உள்ள இத்தொழிலை காத்திட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.