கனமழையால் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் - கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் விவசாயிகள்
Oct 19 2019 5:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கனமழையால் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கயிறு கட்டி, ஆபத்தான முறையில் விவசாயிகள் ஆற்றை கடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொடைக்கானலில், வெள்ளி நீர்வீழ்ச்சி, புலிச்சோலை அருவிகள், வில்பட்டி ஆறு, பெலாக்கெவை ஆறு என நான்கு ஆறுகள் பேத்துப்பாறை பெரியாற்றில் கலப்பதால், கனமழை நேரங்களில் பெரும் காட்டாற்று வெள்ளம் ஏற்படுகிறது. இதுகுறித்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பேத்துப்பாறை பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அக்கரைப்பகுதியில் பீன்ஸ், வாழை, கொய்யா, அவரை உள்ளிட்ட பயிர்கள் விளைவித்துள்ள தோட்டங்களுக்கு சென்ற பெண்கள் மற்றும் முதியவர்கள், கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்கின்றனர். எனவே, தடுப்பணையுடன் கூடிய பாலம் கட்டித்தர அரசு முன்வர வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.