விசாரணைக் கைதியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பான வழக்கு - மதுரை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பு
Nov 14 2019 8:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலையத்தில், விசாரணைக் கைதியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பான வழக்கில், மதுரை குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள எஸ்.பி பட்டினத்தில், கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி, கொலை மிரட்டல் வழக்கில், சையத் முகமது என்பவரிடம் விசாரணை நடத்திய எஸ்.பி. பட்டிணம் காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ், சையது முகமதுவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
இவ்வழக்கின் விசாரணை, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி, திரு. காளிதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 5 மாதத்துக்குப் பின்னர் ஜாமினில் வெளியே வந்த திரு. காளிதாஸ், தற்போது மதுரை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், விசாரணைக் கைதி சையது முகமதுவை என்கவுண்டர் செய்த வழக்கில், உதவி ஆய்வாளர் திரு. காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மாவட்ட நீதிபதி திரு. சண்முகசுந்தரம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அபராதத் தொகையை, சுட்டுக் கொல்லப்பட்ட சையது முகமதுவின் குடும்பத்திற்கு வழங்கவும் உத்தரவிட்டார்.