தமிழகத்தில், ஊரக உள்ளாட்சியமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு
Dec 7 2019 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களைத் தவிர்த்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் திரு.பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த புதிய அட்டவணையை வெளியிட்டார். அப்போது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களைத் தவிர்த்து, வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார். இதற்கான வேட்பு தாக்கல் வரும் 9ம் தேதி தொடங்கும் என்றும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 17ம் தேதி நடைபெறும் என்றும் குறிப்பிட்டார். வேட்பு மனுக்களை திரும்பப்பெற வரும் 19ம் தேதி கடைசிநாள் என்றும், ஜனவரி 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் திரு.பழனிசாமி கூறினார்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு, 49 ஆயிரத்து 688 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்றும் திரு.பழனிசாமி தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 10 ஆயிரத்து 306 பதவிகளுக்கு ஜனவரி 11ம்தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்றும் திரு.பழனிசாமி கூறினார்.