நாகை அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதில் போட்டி : அமைச்சர் - எம்.எல்.ஏ. இடையே மோதல்
Dec 7 2019 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவக்கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க, ஆளுங்கட்சியில் நடைபெறும் மல்லுக்கட்டும், அமைச்சருக்கு எதிராக முதல்வரை சந்தித்த ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, நாகை அருகே ஒரத்தூரில் மருத்துவக் கல்லூரியை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாகைக்கு மிக அருகில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளாகவே திருவாரூர் மற்றும் காரைக்காலில் 2 மருத்துவக் கல்லூரிகள் ஏற்கெனவே உள்ள நிலையில் சுமார் 50 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்தே மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ள மயிலாடுதுறையில் புதிய மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி அங்கு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைக்க இலவசமாக நிலம் தருவதாக, நீடூர் முஸ்லீம் ஜமாத்தார்கள் ஒப்புதல் பத்திரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகப்பட்டினம் அருகே மருத்துவக்கல்லூரியை அமைக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றார்.
இதற்கு எதிராக மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும் என பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ், தமிழக முதல்வரை சந்தித்துள்ளார். இதற்காக அவரை பாராட்டி மயிலாடுதுறையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை பகுதியில் மருத்துவக்கல்லூரியை அமைக்க மாவட்ட அமைச்சர் தடையாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.