வெங்காய விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வெங்காயம் பதுக்கப்படுவதாக கிடைத்த தகவல் - திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட சந்தைகளில் குடிமைப்பொருள் அதிகாரிகள் சோதனை
Dec 10 2019 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெங்காய விலை மிகடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வெங்காயம் பதுக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட சந்தைகளில் குடிமைப்பொருள் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி பழைய பால்பண்ணை அருகே அமைந்துள்ள வெங்காய மண்டியில் வெங்காயம் மொத்தமாக சேமிக்கப்பட்டு, அங்கிருந்து காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்ட்ராவில் இருந்து 30 டன் எகிப்து வெங்காயம் திருச்சிக்கு வந்தது. இதைத்தொடர்ந்து குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வெங்காயம் பதுக்கப்படுகிறதா என்பது குறித்து கடைகளில் சோதனையிட்டனர். வெங்காயத்தை பதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோல், திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். மேலும், அதிக விலைக்கு வெங்காயம் விற்கப்படுகிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதிக அளவில் வெங்காயங்களை வைத்திருக்கக்கூடாது என்றும், அதிக விலைக்கு விற்கக்கூடாது எனவும், கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூர் ஒன்றியங்களில், சுமார் 70 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடைக்கு தயாராக இருப்பதால், விவசாயிகளிடம் நேரிடையாக நல்ல விலை கொடுத்து அரசு வாங்கினால், வெங்காய தட்டுப்பாட்டினை போக்க முடியும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.