திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது : மலை உச்சியில் மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் பலத்த பாதுகாப்பு
Dec 10 2019 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அண்ணாமலையார் திருக்கோயில் கருவறையில் அதிகாலை பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு, கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனிடையே, 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை நகர் பகுதி மற்றும் கிரிவலப்பாதை சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, நெல்லையில் உள்ள நெல்லையப்பர் திருக்கோயிலில் கார்த்திகை திருவிழாவையொட்டி, நெல்லையப்பர் சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.