குடியுரிமை சட்டத்திருத்தத்தில் இலங்கை தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடமளிக்கவேண்டும் - மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Dec 10 2019 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை சட்டத்திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடமளிக்க வேண்டு என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தை, மதத்தின் அடிப்படையில் அணுகாமல், மனிதநேயத்தின் அடிப்படையில் மத்திய அரசு கையாளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவர், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர் ஆகியோர் 6 ஆண்டுகள் இங்கே வசித்தாலே இந்திய குடியுரிமை வழங்கலாம் என்று குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்திருப்பதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பன்னெடுங்காலமாக இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் இதில் விடுபட்டு இருக்கிறார்கள் என திரு. டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுக்கும் இந்தச் சட்டத்திருத்தம் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டால் மட்டுமே, இந்தியா மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் போற்றுகிற தேசம் என்பது உறுதியாகும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே, இப்பிரச்சினையைத் தாயுள்ளத்தோடு மத்திய அரசு அணுக வேண்டுமென திரு. டிடிவி தினரகன் கேட்டுக்கொண்டுள்ளார்.