கடனுக்கு வட்டி கொடுக்காததால் வீட்டை இடித்து அராஜகம் - மதுரையில் கந்துவட்டி கும்பல் அட்டூழியம் - பிள்ளைகளுடன் வீதியில் நிற்பதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் கண்ணீர்
Dec 14 2019 11:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் வட்டி பணம் கொடுக்காதவரின் வீட்டை, கந்துவட்டி கும்பல் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை சிங்கம்பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்த குமார்-பரமேஷ்வரி தம்பதிக்கு, நந்தினி, காவ்யாஞ்சலி, சாதனா என, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வரும் குமார், குடும்ப வறுமை, பிள்ளைகளின் படிப்பு செலவு போன்ற காரணங்களால், கடந்த 2014-ம் ஆண்டு, நாகராஜன் என்பவரிடம், வீடு மற்றும் நிலப் பத்திரங்களை அடமானம் வைத்து, 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். 3 ஆண்டுகள் வட்டி கட்டிய நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வட்டி தொகை கட்டாததால், மீட்டர் வட்டி கணக்கிட்டு, 7 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அசல் மற்றும் வட்டியைக் கொடுக்க முடியாததால், குமாரின் வீட்டை, கந்துவட்டி கும்பல், இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். வீட்டை இடித்து விட்டதால், 3 பிள்ளைகளுடன் உணவின்றி தவித்து வருவதாக, பாதிக்கப்பட்ட பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
கந்துவட்டி கொடுமை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், மாநகர காவல் ஆணையரிடம், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த நாகராஜன் மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.