தமிழகத்தில் நேற்று காலை முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமமையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கத்திப்பாரா, விமான நிலையம், அனகாபுத்தூர், பல்லாவரம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே, கரூர் மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, குளித்தலை ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதால், வெற்றிலை, நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், வேதாரண்யம், தென்னம்புலம், திருப்பூண்டி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட இடங்களில் காலை முதல் இரவு வரை விடிய விடிய கனமழை பெய்தது. சம்பா சாகுபடிக்கு தேவையான மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உட்பட மாவட்டம் முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வரும் இந்த தொடர் சாரல் மழையால் கடுமையான குளிர் காற்று வீசுகிறது. இதனால தொடர்ந்து குளுமையான சூழல் நீடிக்கிறது.
திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம், கண்டோன்மெண்ட், மத்திய பேருந்து நிலையம், ஏர்போர்ட், கருமண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இதேபோன்று புறநகர் பகுதிகளான மணச்சநல்லூர், லால்குடி, சமயபுரம் மற்றும் திருவெறும்பூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மதியம் தணிந்திருந்த மழை இரவு கனமழை பெய்தது. குறிப்பாக முத்தியால்பேட்டை, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, உப்பளம் மற்றும் கிராமப்பகுதிகளான வில்லியனூர், பாகூர், கரிக்கலாம்பாக்கம், மதகடிப்பட்டு, திருக்கனூர் உள்ளிட்ட இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த கன மழை காரணமாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.