மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பகுதியில் நாளை தொடங்குகிறது யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாம் - மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முகாமை நோக்கி யானைகள் பயணம்
Dec 14 2019 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நாளை தொடங்குகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய கோயில்களில் இருந்து யானைகள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இந்த முகாம் நாளை தொடங்கி, வரும் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. புத்துணர்வு முகாமில் யானைகளுக்கான புத்துணர்வு பயிற்சிகளும் ஊட்டச்சத்துக்களும் வழங்கப்படும். இதே போல பாகன்களுக்கும் பல்வேறு மருத்துவ சோதனைகள், மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில் யானைகள் முகாமிற்கு அழைத்து வரப்படுகின்றன. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் யானையான பார்வதி அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல், அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுந்தரவள்ளி யானையும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான தெய்வானை யானையும் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் யானையான ராமலட்சுமி முகாமிற்கு அனுப்பப்படும் முன் அதற்கு பூஜை, தீபாராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க யானையை பொதுமக்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.
முகாமில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள், திருவாணைக்காவல் கோவில் யானை அகிலா மற்றும் மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் யானை லெட்சுமி ஆகியவை திருச்சியிலிருந்து இன்று புறப்பட்டுச்சென்றன. இவற்றை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
54 வயதாகும் பழனி கோயில் யானையான கஸ்தூரி லாரி மூலமாக முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 13வது ஆண்டாக யானைகள் புத்துணர்வு முகாமில் பழனிக் கோயி யானை பங்கேற்கிறது. முன்னதாக கஸ்தூரி யானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாராதனை காட்டப்பட்டு பழங்கள் கொடுக்கப்பட்டன.