மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம் - நள்ளிரவில் திடீரென மருத்துவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
Dec 15 2019 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அரசு மருத்துவமனை மருத்துவரை தாக்கிய விவகாரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நள்ளிரவில் திடீரென காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் மனைவி முனீஸ், பிரசவத்திற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்,
மகப்பேறு வார்டில் நோயாளியின் உறவினர் காலணி அணிந்து வந்ததால், அங்கு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவரை தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்துக்கான சிகிச்சைப் பிரிவில் அந்த மருத்துவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவரை தாக்கியதாக ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி, முருகேஸ்வரி ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை காவல்துறையினர் முறையாக கைது செய்யவில்லை எனக்கூறி நள்ளிரவில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட பெண்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.