ஆன்லைன் லாட்டரி - தீமைகள் குறித்து விழிப்புணர்வு விழுப்புரத்தில் வீதி வீதியாகச் சென்று ஒலிப்பெருக்கியில் போலீசார் பிரச்சாரம்
Dec 15 2019 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆன்லைன் லாட்டரி விளையாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழுப்புரத்தில் போலீசார் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
விழுப்புரம் நகரில் ஆன்லைன் லாட்டரி விளையாட்டில் சிக்கி கடனாளியான சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் கடந்த 12ம் தேதி தனது 3 பெண் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் 3 நம்பர் ஆன்லைன் லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடந்த 3 நாட்களில் 25க்கும் மேற்பட்ட ஆன்லைன் லாட்டரி வியாபாரிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ஆன்லைன் லாட்டரி விற்பனை குறித்து புகார் தெரிவிக்க 965540092, 9498100489 ஆகிய இரண்டு செல்போன் எண்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விளையாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் சென்று போலீசார் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் நகருக்குட்பட்ட மந்தக்கரை, நேருஜி வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் ஆட்டோக்கள் மூலம் வீதி, வீதியாக சென்று ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.