காஸா பகுதியில் அமலில் இருந்த 3 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் 4 மணி நேரத்திற்குள்ளாக மீறல் : மீண்டும் போர்க்களமாக மாறியது காஸா - இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஒரே நாளில் 150 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தகவல்
Aug 2 2014 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஸா பகுதியில் அமலில் இருந்த 3 நாள் போர் நிறுத்தத்தை ஹமாஸ் அமைப்பு, 4 மணி நேரத்திற்குள்ளாக மீறியதையடுத்து, காஸா மீண்டும் போர்க்களமாக மாறியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், நேற்று ஒரே நாளில் 150 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 8-ம் தேதி முதல் நடத்தி வரும் கடும் தாக்குதலில், குழந்தைகள் உட்பட ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளை இழந்து ஐ.நா. பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவும், ஐ.நா.வும் கேட்டுக் கொண்டதற்கிணங்க காஸா பகுதியில் 3 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக் கொண்டன. இந்த போர் நிறுத்தம் நேற்று காலை தொடங்கியது. ஆனால், போர் நிறுத்தம் தொடங்கிய 4 மணி நேரத்திலேயே தாக்குதல் நடைபெற்றதால், காஸா பகுதி மீண்டும் போர்க்களமாகியுள்ளது. இஸ்ரேல் எல்லைப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் அமைக்கப்பட்டிருந்த அதிநவீன சுரங்கங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹடார் கோல்டின் எனும் இஸ்ரேல் வீரரை, ஹமாஸ் கடத்திச் சென்றதாலும், மேலும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 2 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாலும், போர் நிறுத்தத்தை ஹமாஸ் மீறிவிட்டதாக குற்றம்சாட்டி இஸ்ரேல் ராணுவம் நேற்ற தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், நேற்று ஒரே நாளில் 150 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதற்கு ஹமாஸ் அமைப்பினரே காரணம் என அமெரிக்காவும், ஐ.நா. சபையும் குற்றம்சாட்டியுள்ளன. இதனிடையே, காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து, கொல்கத்தாவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.