சீனாவில் குறைந்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் : ஒரே நாளில் ஆயிரத்து 846 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்
Feb 25 2020 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த நிலையில், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வேகமாக பரவத் தொடங்கியுள்ளது,அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2 ஆயிரத்து 621 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியா, தாய்லாந்து, இந்தியா, ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், சீனாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 23ம் தேதி முதல் இம்மாதம் 2ம் தேதி வரை கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்ததாகவும் அதனை தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த சீனா கடும் முயற்சிகள் எடுத்து வருவதாக உலக சுகாதார மையம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 846 பேர் குணமடைந்து ஞாயறன்று வீடு திரும்பினர். இதையடுத்து அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், ஈராக், குவைத், ஓமன் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தங்கள் நாட்டில் மூவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லவேண்டாம் என தங்கள் நாட்டு மக்களுக்கு ஐக்கிய அரபு அமிரகம் வலியுறுத்தியுள்ளது.